All NewsNews
அவசர நிலைகள், குற்றச்சம்பவங்கள்
AntonrajAugust 14, 2026

அவசர நிலைகள், குற்றச்சம்பவங்கள் மற்றும் பல்வேறு அநீதிகள் நிகழும்போது பொதுமக்கள் தாமதமின்றித் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், இலங்கை பொலிஸ் திணைக்களம் முக்கியமான அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தி, அவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
திடீர் விபத்துகள், குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பாக உடனடி பொலிஸ் உதவியைப் பெறுவதற்கு 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புச் சேவையைத் தொடர்புகொள்ளலாம்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் உரிமை மீறல்கள் மற்றும் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும் முறைப்பாடுகளைப் பதிவுசெய்வதற்கும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற அவசர உதவி இலக்கத்தைப் பயன்படுத்தலாம்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள், குற்றங்கள் மற்றும் ஏனைய அநீதிகள் குறித்து அறிவிப்பதற்கு, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் 109 என்ற அவசர உதவி இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், உங்கள் பகுதியில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் போதைப்பொருள் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதற்கு, தேசிய போதைப்பொருள் தடுப்புப் பணியகம் அல்லது போதைப்பொருள் தகவல் பிரிவின் 1984 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.
பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பையும் சமூகத்தின் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில், இந்த முக்கியமான அவசர தொலைபேசி இலக்கங்களைத் தங்களது கையடக்கத் தொலைபேசிகளில் இன்றே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



